Tuesday 9 August 2016

புது டில்லியின் எலும்பு சுவைக்கும் நாய்களே இது இனக்கொலை இன்றேல் எது இனக்கொலை?


எண்பத்தி மூன்றில் இலங்கையில் நடந்தது
இனக்கொலை என்றார் இந்திரா காந்தி
இந்திய சட்டவாளர் சபையும் சொன்னது
அது இனக்கொலையே இனக்கொலையே என்று
ஆனால் இங்கு சில சில்லறைக்  கைக்கூலிகள் எல்லாம் 
இலங்கையில் இனக்கொலையே நடக்கவில்லையென 
ஏதோ எல்லாம் சின்னத்தனமாகச் சொல்கின்றன
எலும்புத் துண்டு நக்குவதற்காகச் சொல்கின்றன 

எங்கோ இருந்து துரத்தப்பட்ட
கயவர் கூட்டம் எம்மண்ணில் குடியேறியது
கட்டுப்பாடற்ற கலப்புத்  திருமணங்களால்
கலாச்சார விட்டுக் கொடுப்புகளால்
கயமை தாண்டவமாடியதால்
ஓர் இனம் உருவாகியது சிங்களமென்றானது
தூய தமிழினம் சிறுபான்மையாகியது
குணரத்தினம் குணரட்னாவாக
குணசிங்கங்கள் குணசிங்கவாக
தென்னகக்கோன்கள் தென்னக்கோன்களாகின
வளவன்கள் வளவ ஆகின
கமம் என்னும் கிராமங்கள் கம என்றாக
குளம் என்னும் பொருள் கொண்ட வில்கள் வில ஆக
இனம் ஒன்று அழிவுக்குள்ளானது சிறுபான்மையானது
இனக்கொலை தொடங்கி ஆயிரம் ஆண்டுகளாகிவிட்டது
ஈனர்கள் இன்றும் தொடர்கின்றனர் இனக்கொலை
பெரும்பான்மையினத்தை வந்தேறு குடிகள்
சின்னா பின்னமாக்கிச் சிறுபான்மையாக்கியது
இனக்கொலை இன்றேல் எது இனக்கொலை

ஆண்டாண்டு நாம் ஆண்டு வந்த பூமியில்
வியாபாரத்துக்கென வந்த ஐரோப்பியர்
எம்மைப் பிரித்தனர் பிளவுபடுத்தினர்
காட்டிக் கொடுக்கும் கயமை மிகு
துரோகிகளைப் பயன்படுத்தினர்
எம் ஆட்சியைப் பறித்தினர்
எம் இறைமையை இல்லாததாக்கினர்
நம் நிலங்களான நன்னிலங்களை
ஒன்று படுத்தினர் ஒரு நாடாக்கினர்
அவர் எம்மை விட்டுச் செல்கையில்
எம் இறைமை எம்மிடம் இல்லை
இது இனக்கொலை இன்றேல் எது இனக்கொலை

எத்தனை இடர்கள் எத்தனை துயர்கள்
எத்தனை ஒதுக்கல்கள் எத்தனை புறக்கணிப்புக்கள்
அத்தனைக்கும் நடுவிலும் தனித்துவம் இழக்காமல்
தமிழினம் நின்றதால் தனித்துவம் அழிக்க
தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்தனர்
அதை அமைதியாக ஆனால் ஆணித்தரமாக
தட்டிக் கேட்ட தலைவர்களை
காடையரை ஏவிக் கால்களால் உதைத்தனர்
உள்ளாடையுடன் பாராளமன்றத்தில்
கொதிந்தெழுந்து உரையாற்றினார் நாகநாதன்
அமிர்தலிங்கம் தலையில் இருந்து
இரத்தம் வடிய வடிய உரையாற்றினார்
கடைகளைக் கொழுத்தினர் கன்னியரைச் சிதைத்தனர்
குழந்தையைக் கொதிதாரில் போட்டுக் கொன்றனர்
கோவில் பூசாரியை உயிருடன் கொழுத்தினர்
இத்தனை கொடுமைகளின் பின்னரும்
இது இனக் கொலை இன்றேல்
எதுதானிங்கு இனக்கொலை

1961இல் தமிழ் நிலமெங்கும் அரசப் பொறியை
அசையாமற் செய்தது அறப்போர்
சிலாபத்து வேங்கை ஃபிரான்ஸிஸ் பெரேரா
என்னும் தமிழ்ப்போராளி கச்சேரி வாசலில் இருந்து
காவற்துறை இழுத்து எறிய எறிய15 தடவைகள்
மீண்டும் மீண்டும் பாய்ந்து வந்து படுத்தான்
கச்சேரிக் கதவு திறக்கவிடாமல் தடுத்து நின்றான்
ஆண்களும் பெண்களுமாய் அடி வாங்கி உதை வாங்கி
அகிம்சை வாழியில் அனைத்த்தும் தாங்கி
கச்சேரியை நடக்கவிடாமல் தடுத்தனர்
பின்னர் சிங்களப் படையினரை
சிறிமாவோ ஏவி தமிழர் அடக்கினர் அறப்போரை
அது இனக்கொலை இன்றேல்
இங்கு எதுதான் இனக்கொலை

எழுபத்தி நான்கில் தமிழை ஆராய்ச்சி செய்ய என
யாழ்நகரில் கூடிய தமிழர்தம் கூட்டத்தை
தடியடி செய்து கண்ணீர்ப் புகை வீசி
மின்கம்பியை வேண்டுமென அறுத்து
அப்பாவிகளை வதைத்து அக்கிரமம் புரிந்து
பதினொருவரைக் படுகொலை செய்ததமை
இனக்கொலை இன்றேல் எது இனக்கொலை

காலம் காலமாய் வளர்த்து
கலைத்தாயின் பெட்டமாய்ப் பேணி
கல்வித் தாகத்தின் தடாகமாய் போற்றி
தமிழர் துதித்த கோவிலாம் நூலகத்தை
ஓரீரவில் அமைச்சர்கள் இருவர்
சாம்பல் ஆக்கிய கொடுமையைக் கண்டு
பட்டது போதும் போராட்டம் இனி வேண்டாம்
என சலிப்படையவில்லை தமிழர்கள்
தொடர்ந்தூ போராடினார்கள்
நாம் தோற்கடிக்கப்பட்ட இனம்
எனச் சொல்லவில்லை
தொடர்ந்து போராடினார்கள்
இனக்கொலை இன்றேல்
எதுதான் இனக்கொலை

ஐந்து சின்னஞ்சிறு கைக்குழந்தைகள்,
நாற்பத்திரெண்டு பத்துவயதுச் சிறுவர்கள்,
85 பெண்கள், 28 முதியவர்கள்
அத்தனை பேரையும் அநியாயமாகச்
சத்துருக்கொண்டானில் கொன்றது
கருணைக்கொலையா இனக்கொலையா


அரச படைகள் போட்ட துண்டுப் பிரசுரத்தை நம்பி
நவாலிப் பேதுருவானவர் தேவாலயத்திலும்
முருக மூர்த்தி கோவிலிலும் தஞ்சமடைந்த
அப்பாவிகள் மேல் புக்காராவில் வந்து
குண்டு போட்டுக் கொன்றது
இனக்கொலை இன்றேல்
எது இனக்கொலை


வல்வை நூலகத்திற்கு மக்களைச்
செல்லுமாறு பணித்து விட்டு
பின்னர் அதைக் குண்டு வைத்துத் தகர்த்ததும்
குமுதினியில் பயணம் செய்த
அப்பாவி மக்களை நடுக்கடலில் மறித்து
கூரிய கத்திகளால் கதறக் கதறக் குத்திக் கொன்றதும்
வெலிகடைச் சிறைச்சாலையில் கொன்றதும்
களுத்துறைச் சிறைச்சாலையில் கொன்றதும்
யாழ் குருநகரில் கொன்று ஒழித்ததும்
அம்பாறை உடும்பன் குளத்தில் கொன்று குவித்ததும்
பிந்துருவேவாவில் பிணந்தின்னிகள் செய்ததும்
கிளாலிப் படகில் உயிர்களை கிள்ளி எறிந்ததும்
இனக்கொலையின்றேல்
எது இனக்கொலை

ஈழ விடுதலைக்கான
படைக்கலப் போராட்டம்
எமது உறுதியான போராட்டம்
மற்ற நாடுகளின் விடுதலைக்கு
முன் மாதிரியாகும் என
ஆதிக்க நாடுகள் அச்சம் கொண்டன
சக்கர வியூகத்தில் அபிமன்யுவைப் போல
எம் போராளிகளை இருபதிற்கு மேற்பட்ட நாடுகள்
வஞ்சகமாகச் சூழ்ந்து கொண்டன
அயல் நாட்டுப் படைகள் இருபதினாயிரம்
பின்கதவால் வந்து ஈழத்தில் இறங்கியது
உணவும் போகாமல் நீரும் போகாமல்
கடலிலும் நிலத்திலும் காவல் காத்தன
தமிழர்க்கு எதிரான இந்தக்கொலைகள்
இனக்கொலை இன்றேல் எதுதான் இங்கு இனக்கொலை

வல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த
அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள்
பயிற்சிப் பட்டறை  நாடி வந்த கதையது
பட்டறையல்ல கல்லறை இதுவென
புக்காராக்கள் சீறிவந்த சதியது
பட்டுடல்கள் சிதைய குண்டுகள்
வீசிச் சிங்களம் கொன்ற கதியது
தமிழர் வரலாறு மறக்குமோ
வஞ்சியரைக் கொன்ற வடுக்களை
தமிழனின் வலிகளை வரலாறு மறக்குமோ
அது இனக்கொலை இன்றேல் இங்கு எதுதான் இனக்கொலை

கொத்தணிக் குண்டுகள் போட்டனர்
பொஸ்பரஸ் குண்டுகளும் வீசினர்
கண்மூடித்தனமாக கண்ட இடமெங்கும்
எறிகணை மழை பொழிந்தனர்
பாடசாலைகளும் அழிந்தன
மருத்துவ மனைகளும் தரை மட்டமாகின
வழிபாட்டிடங்களும் சிதைக்கப்பட்டன
அது இனக்கொலை இன்றேன் இங்கு எதுதான் இனக்கொலை

ஒரு சிறு நிலப்பரப்பினுள் மூன்று இலட்சம் பேரை முடக்கி
உணவு மறுத்தி நீர் தடுத்து மருந்துகள்தானும் மறுத்து
குண்மழை பொழிந்து கொன்ற கொடூரம்
காயப்பட்டோரை உயிருடன் புதைத்த கொடூரம்
சரணடைய வந்தோரைச் சல்லடையாக்கிய கொடூரம்
எஞ்சியோரைத் தடுத்து வைத்து வதை செய்த கொடூரம்
இனக்கொலை இன்றேல் எதுதான் இங்கு இனக்கொலை

வந்தாரின் வயிறு நிறைத்த விருந்தோம்பிகள்
வன்னி நில முத்துக்கள்
குடிக்கக் கூட நீரின்றி வதங்கினர்
ஒரு சிறு நிலப்பரப்புக்குள்
ஒடுக்கப்பட்டனர்
எத்தன ஆண்டுகள் ஆயினும் ஆறுமோ
அந்த வடுக்கள் முள்ளிவாய்க்கால்
மகாவம்ச சிங்களத்தின் மிருகத்தனத்தின் வடிகாலானது
ஆளவிடக்கூடாது தமிழனை என்னும்
ஆரிய சாதியத்தின் உயிரோடை ஆனது
அது இனக்கொலை இன்றேன் இங்கு எதுதான் இனக்கொலை

டப்ளின் தீர்ப்பாயம் சொன்னது இனக்கொலை என்று
பிறீமன் தீர்ப்பாயமும் சொன்னது இனக்கொலை என்று
அமெரிக்கச் சட்டப் பேராசிரியர் பொயிலும்
சொன்னார் இனக்கொலை என்று
புது டில்லி வீசும் எலும்புத் துண்டை
சுவைக்கும் நாயிற் கேவலமானோரே
இது இனக்கொலை இன்றேல்
இங்கு எதுதான் இனக்கொலையாம்

Monday 8 August 2016

படைத் துறை முதல் கட்சி அரசியல்வரை இணைய வெளி ஊடுருவல்

2016-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் அமெரிக்கப் படைத்துறையினர் இணையவெளிப் படைப் பிரிவிற்கு என ஒரு கட்டளைப் பணியகத்தை உருவாக்கியதுடன் அமெரிக்கப் படைத்துறைக்கான பொதுக் கட்டளையகத்தின் ஒரு பகுதியாக இணையவெளிப் படைத்துறையையும் கொண்டு வந்துள்ளனர். அமெரிக்கப் படைத்துறையின் இணையவெளியில் செய்யும் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தாக்குதல் நடவடிக்கைகளையும் மற்றப் படைத்துறைகளுடன் ஒத்திசைவு நிகழ்வுகளாக்குவதற்கான ஏற்பாடுகளையும் அமெரிக்கப் படைத்துறை செய்துள்ளது. 6200 பேரை மொத்தமாகக் கொண்ட 133 இணையவெளிப் படையணிகள் உருவாக்கும் திட்டம் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டு நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. தரைப்படை, கப்பற்படை வான்படை போலவே இணைய வெளிப்படைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

எங்கும் இணைய வெளி ஊடுருவல்கள்

தற்போது எல்லா முன்னணி நாடுகளும் இணையவெளிப் படைத்துறையில் கவனம் செலுத்தும் வேளையில் இணையவெளி ஊடுருவல்கள் படைத்துறை, வர்த்தகம், விஞ்ஞான ஆராய்ச்சி, எனப் பரவி இப்போது கட்சி அரசியலுக்குள்ளும் நுழைந்துள்ளது. ஓர் அரசியல் கட்சியின் இரகசியங்களை மற்ற அரசியல் கட்சியினர் ஊடுருவி தகவல்களைப் பெற்று அவற்றை அம்பலமாக்குவது நாடுகளுக்குள் மட்டுமல்ல நாட்டு எல்லைகளையும் தாண்டிச் செல்கின்றது.

ஹிலரியின் மின்னஞ்சல் ட்ரம்பின் பொன்னூஞ்சல்
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்க விருக்கும் அமெரிக்க அதிபருக்கான் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் 2000-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை அமெரிக்காவின் வெளியுறவுக்குப் பொறுப்பான அரசுத்துறைச் செயலராக இருந்த போது மின்னஞ்சல்களைப் பிழையான விதங்களில் கையாண்டார் என்ற குற்றச் சாட்டு தீவிரமாக முன் வைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் அவர் தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக தனது பணிமனை மின்னஞ்சல் வசதிகளைப் பாவித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் பல மிக இரகசியமாகச் செய்ய வேண்டிய மின்னஞ்சலூடான தகவல் பரிமாற்றங்களை தனது சொந்த மின்னஞ்சலூடாகச் செய்து அரச இரகசியங்களை ஆபத்துக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டது. ஹிலரி தான் மேற்கொண்ட மின்னஞ்சல்களை அமெரிக்க உள்துறையினரிடம் கையளிக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டார். அவரும் தனது முழு கணனித் தொகுதி தொடர்பான தகவலகளை வழங்கினார். அவற்றில் முப்பதினாயிரம் மின்னஞ்சல்கள் ஏற்கனவே அழிபட்டு காணமல் போய்விட்டதாக ஹிலரி தெரிவித்தார். இதனால் முன்னாள் அமெரிக்க உள்துறைப் பாதுகாப்பு உயர் அதிகாரி ஹிலரி மிகவும் கவலையீனமாகச் செயற்பட்டார் என்ற குற்றச் சாட்டை பகிரங்கமாக முன்வைத்தார். அவரது கருத்து வெளிவந்தவுடன் கருத்துக்கணிப்பில் முன்னணியில் இருந்த ஹிலரி தனது ஆதரவுத் தளத்தை இழந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னணிக்குச் சென்றார்.

இரசியா ஹிலரியின் கட்சியை இணையவெளியில் ஊடுருவியதா?
சென்ற ஆண்டே குடியரசுக் கட்சியின் தேர்தல் பணிமனைக் கணனிகள் இரசியாவில் இருந்து இணையவெளியூடாக ஊடுருவப் பட்டு அதன் வேட்பாளரான நான்கரை பில்லியன் டொலர்கள் பெறுமதியான செல்வந்தர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான தகவல்களை இரசியா பெற்றுக் கொண்டதாகக் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. பின்னர் மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஹிலரி கிளிண்டனை முறைப்படி வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னர் மக்களாட்சிக் கட்சியின் தேசிய அவையின் மின்னஞ்சல்களை ஜூலியன் அசாஞ்சேயின் விக்கிலீக்ஸ் அம்பலப் படுத்தியது. அந்த மின்னஞ்சல்கள் இரசியாவில் இருந்தே ஊடுருவிப் பெறப்பட்டவை என்பதை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளது. ஊடுருவல் செய்வதற்குப் பல நாட்களுக்கு முன்னரே அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் மக்களாட்சிக் கட்சியின் கணனிகள் இரசியாவில் இருந்து ஊடுருவப் படலாம் என அக் கட்சியை எச்சரித்திருந்தனர்.

பழிவாங்கினாரா அசாஞ்சே?
அமெரிக்காவின் உலக நாடுகல் பலவற்றில் உள்ள பல்வேறு தூதுவரகங்களில் இருந்து அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களைப் பெற்றுக் கொண்ட விக்கிலீக்ஸ் அவற்றை அம்பலப் படுத்தி அமெரிக்க அரசுக்குப் பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தியிருந்தது. அப்போது விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சேயை தண்டிக்க வேண்டும் என்பதில் ஹிலரி கிளிண்டன் தீவிரமாக இருந்தார். அதற்காக அவரது ரிஷி மூலம் சுவிஸ்ற்லாந்தில் தோண்டி எடுக்கப் பட்டு இரு பெண்களுடன் அவர் முறை தவறி உடலுறவு கொண்டார் என்ற குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு அவரைப் பிரித்தானியாவில் இருந்து சுவிஸ்ற்லாந்துக்கு நாடுகடத்தும் உத்தரவை பிரித்தானிய நீதிமன்றம் பிறப்பித்த வேளை அவர் இலண்டனில் உள்ள எக்குவேடர் தூதுவரகத்தில் தஞ்சமடைந்து இன்றுவரை அதனுள்ளே இருக்கின்றார். தனக்குத் தண்டனை கிடைக்க முன்னின்ற ஹிலரியைப் பழிவாங்க ஜூலியான் அசாஞ்சே முயன்றதாகத் தெரிவிக்கப் படுகின்றது. ஹிலரி மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் படுவதைத் தடுக்க அசாஞ்சே முயன்றார் எனவும் தெரிவிக்கப் படுகின்றது. ஆனால் மக்களாட்சிக் கட்சியின் தேசிய சபையின் நிர்வாகி மின்னஞ்சல்கள் ஊடுருவப் பட்டமைக்கு தானே பொறுப்பு ஏற்றுக் கொண்டு ஹிலரியைக் காப்பாற்றினார். தங்களிடம் ஹிலரியின் மக்களாட்சிக் கட்சியினரின் பல உள்ளக  மின்னஞ்சல்கள் பல மேலும் இருப்பதாக விக்கிலீக்ஸ் சொல்கின்றது. அவற்றைத் தாம் படிப்படியாக வெளிவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டுகின்றார்கள். இரசியாவிடமிருந்தா இந்த மின்னஞ்சல்களைப் பெற்றீர்கள் என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.

இரசியாவை ஊடுருவச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்

மக்களாட்சிக் கட்சியின் தேசியப் பணிமனையை இரசியாவில் இருந்து இணையவெளியூடாக ஊடுருவப்பட்டது என்ற செய்தி தீவிரமாக அடிபடும் வேளையில் மிகவும் சர்ச்சைகுரிய கருத்துக்களை மிகவும் இலகுவாக முன்வைப்பதற்குப் பெயர் போன டொனால்ட் ட்ரம்ப் ஹிலரியின் கணனித் தொகுதிகளை இரசியா ஊடுருவி காணாமற் போன முப்பதினாயிரம் மின்னஞ்சல்களைக் கண்டு பிடித்து அவற்றை ஊடகங்களுக்குக் கொடுக்காமல் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையிடம் கையளிக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார். ஏற்கனவே இரசியாவுடன் பல வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டு டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக முன்வைக்கப் படுகின்றது. இரசியாவிற்கு ஏற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவராக அவர் இருப்பார் என்ற கருத்து இப்போது இரசியாவில் பகிரங்கமாகவும் பரவலாகவும் முன்வைக்கப்படுகின்றது. அமெரிக்காவின் தி அட்லாண்டிக் என்ற ஊடகம் டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சியை இரசியாவின் கட்சியாக மாற்றிவிட்டார் என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையையும் வெளிவிட்டிருந்தது.

ஒத்துவராத கிலரியும் புட்டீனும்
விளடிமீர் புட்டீன் இரசியாவின் தலைமை அமைச்சராக இருந்த போதே அவருக்கும் ஹிலரி கிளிண்டனுக்கும் இடையில் ஒத்து வராது. ஹிலரி அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த போது புட்டீனுடன் கடுமையாகவே நடந்து கொண்டார். விளடிமீர் புட்டீன் தேர்தலில் முறைகேடுகள் செய்தே இரசியாவின் அதிபரானார் என்ற குற்றச்சாட்டையும் ஹிலரி முன்வைத்திருந்தார். அந்த தேர்தல் முறைகேடாக நடந்தது என ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக் கூடியவகையிலும் ஹிலரி பேசியிருந்தார். 2010-ம் ஆண்டு இருவரும் சந்தித்த பின்னர் ஊடக மாநாட்டில் பேச முன்னர் ஹிலரியை புட்டீன் வேண்டுமென்றே நீண்ட நேரம் காக்க வைத்திருந்தார். ஹிலரியின் உரைகளை எழுதுபவர் ஓர் இரசிய வெறுப்பாளரானவர் ஆவார். உக்ரேன் விவகாரத்தில் புட்டீனை ஹிலரி ஹிட்லருக்கு ஒப்பிட்டிருந்தார். அது தொடர்பாக பிரெஞ்சு ஊடகம் புட்டீனிடம் கேள்வி எழுப்பிய போது பெண்களுடன் வாதிடுதல் வேண்டாம் என்றார் புட்டீன்.

டொனால்ட் ட்ரம்பிற்கு இரசியா உதவுகின்றதா?

தற்போது அமெரிக்கத் தேர்தல் களத்தில் எழுந்துள்ள முக்கிய கேள்வி இரசியா நேரடியாக அல்லது மறை முகமாக அல்லது இரண்டு வழியிலும் டொனால்ட் ட்ரம்பிற்கு உதவி செய்கின்றதா என்பதுதான். இரசியப் படைகள் உக்ரேனுக்குள் போகாது என டொனால்ட் ட்ரம்ப் முதலில் தவறுதலாகச் சொல்லியிருந்தார். பின்னர் உக்ரேனின் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தமையை தான் ஆட்சேபிக்கப் போவதில்லை என்றார். இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தான் நீக்குவேன் என்றார். எஸ்தோனியா போன்ற சிறு நாடுகளை இரசியா ஆக்கிரமித்தால் அதை தான் குடியரசுத் தலைவராக வந்தால் தடுக்கப் போவதில்லை என்றார். இவையாவும் இரசியாவிற்கு மிகவும் வேண்டப்பட்டவராக டொனால்ட் ட்ரம்பை மாற்றியுள்ளன. நேட்டோவின் உடன்படிக்கையின் படி ஒரு நாடு அந்நிய நாடு ஒன்றினால் தாக்கப் பட்டால் மற்ற நேட்டோவின் உறுப்பு நாடுகள் தமது நாட்டுக்கு எதிராகத் தாக்குதல் செய்யப்பட்டது போல் அதை எடுத்து தாக்கப்படும் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரானால் நேட்டோ உடன்படிக்கைக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேட்டோவின் விழ்ச்சி இரசியாவிற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்து மீண்டும் சோவியத் ஒன்றியம் போல ஒரு பெரும் நாடுகளின் கூட்டமைப்பைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் கனவு நனவாகலாம். கட்சிகள் ஒன்றின் இணையவெளியில் ஊடுருவுதல் ஒரு நாட்டுக்குள் நடப்பது என்பதைத் தாண்டி இன்னும் ஒரு நாட்டில் இருந்து ஊடுருவி தகவல்களைத் திருடுதல் 2016 நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக நடந்துள்ளது எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இதற்கும் இரசியாவிற்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் உள்ள தொடர்புகளுக்கும் தொடர்புண்டா? உலகப் பூகோள அரசியலை ட்ரம்ப் சரியாக அறிந்து வைத்திருக்காத படியால்தான் அவர் உக்ரேன் தொடர்பாக தவறுதலாகவும் தப்பாகவும் கருத்துக்களை வெளியிடுகின்றார். 1976-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜெரால்ட் போர்ட் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கம் இல்லை எனச் சொன்னது அவர் புவிசார் அரசியலைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற கண்டனத்துக்கு உள்ளாகியதுடன் அவரது தோல்விக்கும் வழிவகுத்தது. டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள் பலர் இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைத்தமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவர்களாகும்.

ட்ரம்பின் வர்த்தகமும் இரசியாவும்

ஹிலரியின் மக்களாட்சிக் கட்சியின் கணனிகள் ஊடுருவப்பட்டமை இரசியாவில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன என இரண்டு தனியார் நிறுவனங்கள் செய்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 1996-ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் "TRUMP TOWER." "TRUMP," "TRUMP INTERNATIONAL HOTEL AND TOWER," "TRUMP HOME", "THE TRUMP CREST DESIGN." ஆகிய வர்த்தகப் பெயர்களை இரசியாவில் காப்புரிமை செய்ய விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் எண்ணியிருந்த எந்த ஒரு கட்டிடமும் இரசியாவில் கட்டப்படவில்லை. ஆனால் 2013-ம் ஆண்டு இரசியாவில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டி நடத்தும் உரிமம் ட்ரம்பின் நிறுவனம் ஒன்றிற்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதை ஒட்டி ட்ரம்ப் தனது டுவிட்டரில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ம் திகதி புட்டீன் தனது நண்பராகப் போகின்றார் எனத் தெரிவித்திருந்தார். 2008-ம் ஆண்டு ட்ரம்ப் புளோரிடா மாநிலத்தில் உள்ள தனது மாளிகையை இரசியச் செல்வந்தர் ஒருவருக்கு 94மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்து 54மில்லியன் டொலர்கள் இலாபம் ஈட்டியிருந்தார். 2013-ம் ஆண்டு ட்ரம்ப் நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழில் இரசிய அதிபர் புட்டீனைப் பாராட்டி ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். ட்ரம்பின் தேர்தல் பரப்புரை முகாமையாளர் இரசியாவின் கைப்பொம்மையாக உக்ரேனில் அதிபராக இருந்த விக்டர் யனுக்கோவிச்சின் ஆலோசகராகவும் இருந்தவர். விக்டர் யனுக்கோவிச் தற்போது இரசியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். 2016 ஓகஸ்ட் மூன்றாம் திகதி டொனால்ட் ட்ரம்பிற்கு பொது மக்களிடம் இருந்து அதிக நிதி கிடைத்ததாகச் செய்திகள் வெளிவந்தன. அது ஹிலரியின் நிதிக்கு இணையானதாகவும் இருக்கின்றது. ட்ரம்பிற்கு வெளிநாட்டில் இருந்து காசு வருகின்றதா?

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் இணையவெளி ஊடுருவல்கள் ஹிலரிக்கு மிகப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கவிருக்கின்றது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...