Thursday 2 January 2014

சீனாவின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பல் வெற்றீகரமாக வெள்ளோட்டம் விடப்பட்டது.

சீனாவின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங் கடந்த முப்பத்தி ஏழு நாட்களாக கடலில் பல நூற்றுக்கு மேற்பட்ட சோதனைகளை வெற்றீகரமாக செய்து முடித்துள்ளது. லியோலிங்கின் தாக்குதல் முறைமை வியூகம அமைக்கும் திறன் ஆகியவை நன்கு பரிசோதிக்கப்பட்டன. யாவும் திட்டமிட்டபடி நடந்தன என்கின்றது சீன ஊடகம் ஒன்று.

சீனாவின் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பலுடன் நீர்மூழ்கிக்கப்பல்கள், ஃபிரிக்கேட் கப்பல்கள், நாசகாரிக் கப்பல்கள், சேவைவழங்கு கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 2013 நவம்பர் ஆரம்பித்து 2012 ஜனவரி 2-ம் திகதி முடிவடைந்த லியோனிங்கின் பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஏவுகணைகளை அழிக்கக் கூடிய இரு நாசகாரிக் கப்பல்களான Shenyang உம் Shijiazhuang உம் இணைந்திருந்தன. அத்துடன் ஏவுகணைகளை வீசும் கப்பல்களான Yantai உம் Weifangஉம் உடன் சென்றன. சில படைத் துறை நிபுணர்கள் இந்த நான்கு கப்பல்களும் ஒரு விமானம் தாங்கிக் கப்பலைப் பாதுகாக்கப் போதுமானவை அல்ல என்கின்றனர். பொதுவாக சீன நாசகாரிக் கப்பல்கள் மற்ற நாட்டுக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியவை என்கின்றனர். இதனால் போதிய அளவு படைக்கலனகளை இவற்றால் எடுத்துச் செல்ல முடியாது. அத்துடன் ஒரு விமானம் தாங்கிக் கப்பலில் விமானங்களை இறக்கவும் பின்னர் அதிலிருந்து பறக்கச் செய்யவும் விமானிகளுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்ச்சி தேவை எனப்படுகின்றது. இதனால் சீன விமானம் தாங்கிக் கப்பல் முழுமையான செயற்பாட்டில் இறங்க இன்னும் இரண்டு ஆண்டுகள் எடுக்கலாம்.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரேயினிடம் இருந்து வாங்கப்பட்ட பழைய விமானம் தாங்கிக் கப்பலை சீனா சீர் செய்து தனது லியோனிங் விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கியுள்ளது. 1985இல் இருந்தே சீனா தனது விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கும் திட்டத்தைத் தீவிரப்படுத்தியது. விமானம் தாங்கிக் கப்பல்களைப் பற்றி அறிவதற்காக சீனா முதலில் 1985-ம் ஆண்டு ஒஸ்ரேலியாவிடமிருந்து அதன் பழுதடைந்த HMAS Melbourne விமானம் தாங்கிக் கப்பலையும் பின்னர் இரசியாவிடமிருந்து Minsk, Kiev ஆகிய கப்பல்களையும் உக்கிரேய்னிடமிருந்து Varyag  கப்பலையும் வாங்கி அவற்றின் தொழில் நுட்பங்களை முதலில் அறிந்து கொண்டது.  இவற்றில் Varyag இப்பொது லியோனிங்காக உருமாற்றப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு சீன மாகாணமான லியொனிங்கின் பெயர் இந்த விமானம் தாங்கிக் கப்பலுக்குச் சூட்டப்பட்டது. பலத்த சிரமங்கள் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே Varyag கட்டி இழுத்துவரப்பட்டது.


சீனாவின் படைத்துறை முன்னேற்றங்கள்
உலகிலேயே அதிக அளவு படையினரைக் கொண்ட மக்கள் விடுதலைப் படை எனப்படும் சீனப் படை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் 2050 ஆண்டு உலகின் மிகப்பெரிய படையாகத் திகழும் நீண்டகாலத் திட்டத்தை ஆரம்பித்தது. அதன்பின்னர் விண்வெளிப்போர் முறை, இணையவெளிப்போர்முறை, உட்படப் பல துறையிலும் வேகமாக முன்னேறிவருகிறது. ஒரு Space Stationஐ அமைத்து அதில் விண்கலங்களை வெற்றிகரமாக இறக்கியது. அமெரிக்காவின் Global Positioning System (GPS)இற்குப் போட்டியாக 15 செய்மதிகளைக் கொண்ட Beidou GPS ஐ உருவாக்கி வருகிறது. உலக நாடுகளில் இரசியாவும் சீனாவும் மட்டுமே அமெரிக்காவின் GPS இல் தங்கியிருக்காத நாடுகளாகும். Global Positioning System (GPS) குடிமக்களுக்கும் படைத்துறையினருக்கும் பயன்படும் ஒரு வழிகாட்டி முறைமையாகும். சீனாவின் Global Positioning System (GPS) அமெரிக்காவிற்கு வர்த்தக ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் சவாலாக அமையும். உலகின் எந்தப் பகுதிக்கும் தனது படையினரை விரைவாக நகர்த்தக் கூடியதாக Y-20 என்னும் பாரிய போர்முனைப் போக்குவரத்து விமானத்தை உருவாக்கியது. ராடார்களுக்கு அகப்படாத stealth fighter விமானத்தின் தனது இரண்டாம் தலைமுறை J31 சீனா உருவாக்கி விட்டது. விண்வெளிப்பயணத்துறையில் பெரும் முன்னேற்றமாக சீனா தனது 120 tonnes rocket engineஐயும் வெற்றீகரமாகப் பரீட்சித்துவிட்டது. சீனா தனது  Z-10 தாக்குதல் உழங்கு வானூர்திகளை பாரிய அளவில்(mass production) உற்பத்திசெய்கிறது. சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்கள் எந்த ஒரு விபத்திலும் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபடவில்லை என மார்தட்டிக் கொள்கின்றது. தனது பாதுக்பாப்பு முன்னேற்பாடுகள் அந்த அளவிற்கு உயர் தரம் வாய்ந்தது என்கிறது சீனா.

சீனா தற்போது இரண்டு Type-94வகை Ballistic ஏவுகணைகளை ஏவக்கூடிய நீர் மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்கின்றது. இவை ஒவ்வொன்றும் ஒரேயடியாக 12 ஏவுகணைகளை வீசக் கூடியவை.  அவற்றின் பாய்ச்சல் தூரம் 7000 முதல் 13000கிலோ மீட்டர்கள் அதாவது 4300முதல் 8100 மைல்கள் சென்று தாக்கக் கூடியவை. சீனா இப்போது நான்கு புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி வருகின்றது. இவை Type-96வகையைச் சார்ந்தவை. இவற்றால் 16 முதல் 24 வரையிலான Ballistic ஏவுகணைகளைத் தாங்கிச் செல்ல முடியும். சீனாவிடம் 200முதல் 240 வரையிலான அணுக்குண்டுகள் இருக்கின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவிடம் மூன்று கடற்படைப் பிரிவுகள் மட்டுமே இருக்கின்றன. இந்தியாவிடம் நான்கு பிரிவுகளும் ஜப்பானிடம் ஒரு பிரிவும்  அமெரிக்கா, பிரிதானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் ஆறு பிரிவுகளை வைத்திருக்கின்றன. அமெரிக்கா தனது கடற்படைக்கு Ford வகை விமானம் தாங்கிக் கப்பல்களை இணைந்த பின்னர் சினாவின் கடற்படை அமெரிக்கக் கடற்படைக்கு கிட்டவும் நிற்க முடியாத நிலை ஏற்படும்.

அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலைப் பற்றிப் பார்க்க இங்கு சொடுக்கவும்: அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்

Tuesday 31 December 2013

2013இல் எழுச்சி பெற்ற அல் கெய்தா

அல் கெய்தா ஈராக்கின் மேற்குப்பகுதியையும் சிரியாவின் கிழக்குப் பகுதியையும் இணைத்து தமக்கென ஒரு நாட்டைப் பிடிக்கும் உத்தியில் ஈடுபட்டுள்ளது. சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் அண்மைக்காலங்களாக அல் கெய்தா தனது பிடியை இறுக்கிக் கொண்டே போகின்றது. 

அன்பர் மாகாணத்தில் உள்ள சுனி அரசியல்வாதிகளுக்கும் ஈராக்கின் சியா ஆட்சியாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. சியா ஆட்சியாளர்கள் அன்பர் மாகாணத்தில் பல அப்பாவிகளைக் கொன்று குவிப்பதாக சுனி பாராளமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்து இன்று(டிசம்பர் 31) பன்னிரண்டு பாராளமன்ற உறுப்பினர்கள் தமது பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குத்லான 9-11 இன் பின்னர் அமெரிக்காவின் மிகத்தீவிரமான கண்காணிப்பில் அல் கெய்தா கொண்டுவரப்பட்டது. இதனால் அல் கெய்தாவால் எந்தவித இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளையும் பாவிக்க முடியாமல் போனது. அவற்றை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறியும் தொழில் நுட்பம் அமெரிக்காவிடம் இருந்தது. இதனால் அல் கெய்தாவின் தலைமைக்குத் தொடர்பாடல் பிரச்சனை இருந்தது. எப்போதும் கொரில்லா இயக்கத்தின் முக்கிய பிரச்சனையே தொடர்பாடல்தான். இதனால் அல் கெய்தா ஒரு புதிய உத்தியைக் கையாண்டது.  பின் லாடன் இருக்கும் போதே அவர் தனது இயக்கத்தை ஒரு franchise(தன்னிச்சைக்கிளை) இயக்கமாக மாற்றிவிட்டார்.  அதன் படி அல் கெய்தாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தமது நடவடிக்கைகளை தமது எண்ணப்படி மேலிடத்தின் கட்டளைக்குக் காத்திராமல் செய்ய முடியும். முக்கியமான தன்னிச்சைக் குழுக்கள்:
1. ஈராக்கில் அல் கெய்தா -Al Qaeda in Iraq (AQI),
2. அரபுக் குடாநாட்டில் அல் கெய்தா- இது யேமலின் செயற்படுகிறது.  -the Yemen-based AL Qaeda in the Arabian Peninsula (AQAP),
3. இசுலாமிய மக்ரெப்பில் அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM)
ஆகியவை தற்போது முக்கியமாகச் செயற்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களாகும்.

அல் கெய்தாவிற்குத் எதிர்பாராமல் அரபு வசந்தத்தம் என்னும் பெயரில் துனிசியா, லிபியா,  எகிப்து ஆகிய நாடுகளில் இசுலாமியர்கள் கிளர்ந்து எழுந்து ஆட்சியாளர்கலை விரட்டினர். இந்தப் புரட்சிகளில் அல் கெய்தா ஓரங்கட்டப்பட்டிருந்தது. பின்னர் அல் கெய்தா விழித்துக் கொண்டு தனது தந்திரோபாயமான வட அமெரிக்க நாடுகளுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிரான புனிதப்போரோடு மட்டும் நிற்காமல் அடைக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிரான இசுலாமிய மக்களின் எழுச்சியிலும் தன்னை இணைத்துக் கொள்கின்றது. இந்த மாற்றப்பட்ட தந்திரோபாயத்தின் ஒன்றாக சிரியாவில் ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான போராளிகளுக்குள் அல் கெய்தா ஊடுருவிக் கொண்டது.

புதிய மனித வெடி குண்டுகள்
2013இல் அல் கெய்தாவினர் ஒரு புதிய வெடிகுண்டுகளை உருவாக்கியுள்ளனர் என்றது அமெரிக்க உளவுத் துறை. அக் குண்டுகள் ஈரமான வெடிக்கக் கூடிய பதார்த்தத்தில் தோய்த்து எடுக்கப்படும். அந்த ஆடை உலர்ந்தவுடன் அந்தப் பதார்த்தம் வெடிக்கும். இந்த வகைக் குண்டுகள் விமான நிலையங்களில் தற்போது உள்ள ஒளி வருடிகளால்(Scanners) கண்டறிய முடியாதவையாகும். இக்குண்டுகளை அல் கெய்தாவின் இப்ராஹிம் அல் அசிரி என்னும் நிபுணர் உருவாக்கியுள்ளார். 

மாலியில் ஆட்சியாளர்களுக்கு எதிராக துவாரெக் என்னும் சிறுபான்மை இனத்தவர் போராடி பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றிய போது தானும் அதற்குள் நுழைந்து கொண்டது. அல் கெய்தாவிற்கு எதிரான போரில் வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தமது தந்திரோபாயங்களையும் மாற்றிக் கொண்டன. தாம் நேரடியாக அல் கெய்தாவிற்கு எதிராக போர் புரிவதைத் தவிர்த்து ஆபிரிக்க நாடுகளில் தமக்கு ஆதரவான நாட்டுப் படைகளுக்கு பயிற்ச்சி அளித்து அவர்களை தமது தலைமையின் கீழ் இசுலாமியப் போராளிகளுடன் போர் புரியும் தந்திரத்தை உருவாக்கின. இந்த இரு மாற்றப்பட்ட தந்திரோபாயங்கள் மாலியில் மோதிக் கொண்டன. மாலியில் பிரேஞ்சுப் படைகள் அல் கெய்தாவை விரட்டியதற்குப் பலி கொடுக்கும் முகமாக எண்ணூற்றிற்கும் அதிகமானவர்களை அல்ஜீரியாவில் அல் கெய்தா ஆதரவுப் படைகள் பணயக் கைதிகளாக்கினார்கள். 39 வெளிநாட்டினர் இந்த பணயக் கைதி நாடகத்தில் கொல்லப்பட்டனர். மாலியில் பிரேஞ்சுப்படைகள் தாக்குதல் நடாத்திய போது அல் கெய்தாவினர் லிபியாவிற்குள் ஓடி ஒளிந்தும் கொண்டனர்.

ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் 6000இற்கு மேற்பட்டவர்களை அல் கொய்தா 2013-ம் ஆண்டு கொன்று குவித்தது. சிரியாவிலும் ஈராக்கிலும் இசுலாமிய அரசுகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்  ஜபத் அல் நஸ்ரா {Jabhat al-Nusra and the Islamic State of Iraq and al-Sham (ISIS)}என்ற அல் கெய்தா சார்பு இயக்கம் தீவிரமாகச் செயற்படுகின்றது. ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தின் கட்டுப்பாட்டில் பல சிரிய நகரங்கள் இருக்கின்றன. அங்கு இசுலாமியச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மேற்கு ஐரோப்பா உட்படப் பல நாடுகளில் இருந்து 11,000 அல் கெய்தாப் போராளிகள் சிரியா சென்று அல் கெய்தாவில் இணைந்து போராடுகின்றனர். சிரியாவில் அல் கெய்தாவில் போராடும் ஐரோப்பிய இளைஞர்கள் இருவரைப் பேட்டி கண்ட அமெரிக்க ஊடகம் ஒன்று நீலக் கண் அல் கெய்தா என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளிவிட்டிருந்தது.

சோமாலியாவில் அல் கெய்தாவின் ஆதரவு இயக்கமான அல் ஷபாப்பினருக்கு எதிராக ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் படைகள் எடுத்த நடவடிக்கைக்குப் பழிவாங்கும் முகமாம கென்யாத் தலைநகர் நைரோபியில் உள்ள கடைத் தொகுதியில் அல் ஷபாப் இயக்கத்தினர் தாக்குதல் நடாத்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஒரு பிரித்தானியப் பெண் தலைமை தாங்கியது மேற்குலக நாடுகளை உலுப்பியது. நான்கு நாட்கள் அந்தக் கடைத் தொகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் அவர்கள் வைத்திருந்தனர்.

இப்போது இசுலாமிய மதவாத அமைப்பான இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் எகிப்தியப் படைத்துறையும் மோதுவதை அல் கெய்தா மிகவும் மகிழ்ச்சியுடன் அவதானிக்கின்றனர். எகிப்தியப் படைத்துறை இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் மீது வன்முறையை தொடரத் தொடர அவர்கள் தம்மைப் போல் மிகவும் தீவிரவாதிகளாக மாறித் தம்முடன் இணைவார்கள் என அல் கெய்தா நம்புகிறது. இசுலாமிய சகோதரத்து அமைப்பைப் பார்த்து வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் பார்க்க புனிதப் போரின் மூலம் ஆட்சியை கைப்பற்றுங்கள் என்கிறது அல் கெய்தா.எகிப்தில் இப்போது பலர் அல் கெய்தாவில் இணையத் தொடங்கி விட்டார்கள்.

அல் கெய்தா தொடர்பான நிபுணர்கள் அல் கெய்தா பெரிதும் செயலிழக்கச் செய்துவிடப்பட்டதாகச் சொல்கின்றனர்:  "Al Qaeda central no longer exists as an effective organization," says Fawaz Gerges, a professor at the London School of Economics and Political Science, who has done extensive field research on al Qaeda. "Most of its skilled leaders and lieutenants have been either killed or captured. It is no longer capable of carrying out spectacular operations along the 9/11 lines."
London School of Economicsஇன் அரசறிவியற்துறைப் பேராசிரியர் Fawaz Gergesஇன் கருத்துப்படி அல் கெய்தாவின் மையப்பகுதி இப்போது ஒரு செயற்படும் அமைப்பாக இல்லை. அதன் திறன் மிக்க தலைவர்களும் தளபதிகளும் கொல்லப்பட்டும் கைது செய்யப்பட்டும் விட்டனர். அதனால் இப்போது 9/11 போன்ற ஒரு தாக்குதலைச் செய்ய முடியாது. ஆனால் சிரியா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் செய்திகள் பேராசிரியர் Fawaz Gergesஇன் கூற்றை மறுதலிக்கின்றன. 2014இல் ஆப்கானிஸ்த்தானில் இருந்து நேட்டோப் படைகள் வெளியேறிய பின்னர் சரியான உண்மை தெரிய வரும்.

Monday 30 December 2013

2013-ம் ஆண்டு: ஒரு மீள் பார்வை

ஆர்ப்பாட்டக்காரர் அடக்க வந்தவரை முத்தமிடுகின்றார்.

இரசியக் கப்பல்கள் சிரியாவை நோக்கி நகர்கின்ற அச்சத்தில் இருந்தும் மாயன் கலண்டரின்படி உலகம் அழியும் என்ற அச்சத்தில் இருந்தும் உலக மக்கள் மீண்டிருக்கையில் 2013-ம் ஆண்டு பிறந்தது. 2008இல் ஆரம்பமான உலகப் பொருளாதாரப் பிரச்சனை 2013வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.  2013-ம் ஆண்டு இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீனின் ஆண்டாகவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு ஒரு மோசமான ஆண்டாகவும் அமைந்தது.


பிலிப்பைன்ஸின் முள்ளிவாய்க்கால்

இயற்கை அனர்த்தங்கள்
பிலிப்பைன்ஸை ஹையான் சூறாவளி மணிக்கு 235மைல் வேகத்தில் தாக்கியதில் பல கரையோர நகரங்களின் குடிசார் கட்டமைப்புக்கள் முற்றாக அழிக்கப்பட்டன. இதுவரை வந்த சூறாவளிகளில் இது நான்காவது பெரியதாகும். ஆறாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
ஐக்கிய அமெரிக்கா இருபது மில்லியன் டொலர்களும் ஜப்பான் பத்து மில்லியன் டொலர்களும் பிலிப்பைன்ஸிற்கு உதவ முன்வந்த போது சீனா இரண்டு மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவியை மட்டுமே செய்தது. இது சீனாவின் மனிதாபிமானமற்ற கஞ்சத்தனம் என விமர்சிக்கப்படது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைத் தாக்கிய ஃபைலின் புயலின் போது இந்திய அரசின் நிவாரண ஏற்பாடுகள் இதற்கு முந்திய இயற்கை அனர்த்தங்களுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக அமைந்திருந்தன என்ற பாராட்டு பல தரப்பினரிடமிருந்து இந்தியாவிற்குக் கிடைத்தன. அமெரிக்க ஒக்லோஹாம நகரம் சுழல்காற்றாலும், மெக்சிக்கோ சூறாவளியாலும் பிலிப்பைன்ஸ் விசியாஸ் நகரம் நிலநடுக்கத்தாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
சிரியாவில் வேதியியல் குண்டுத் தாக்குதல்

சிரியா
2013இல் உலக அரங்கில் முக்கிய இடம் பிடித்தது சிரியாவே. 2012இல் சிரிய அதிபரி பாஷார் அல் அசாத்தின் ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2013இன் இறுதியில் அவர் உறுதியுடன் பதவியில் தொடர்கின்றார். ஆனால் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் பலவீனமடையவில்லை ஆனால் அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் பலத்த இழப்புக்களுடன் பலவீனமடைந்துள்ளார்கள். 2011இல் இருந்து இதுவரை சிரியாவில் கொல்லப்பட்டவர்களில் அரைவாசிப்பேர் 2013இல் கொல்லப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட சிரியாவிற்கான சமாதானத் தூதுவர் என்ன செய்கின்றார் என்பதே பெரிய கேள்வி. அவர் ஐநாவின் செலவில் பல நாடுகளுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அவர் ஜெனிவாவில் 2014 ஜனவரியில் கூட்டவிருக்கும் சிரிய சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈரான் பங்கேற்கக் கூடாது என ஐக்கிய அமெரிக்கா தடை செய்துள்ளது.

ஈரானிய அமெரிக்க பேச்சுவார்த்தை
ஈரான்
2013இல் சிறப்பாக ஒரு தேர்தலை நடாத்திய ஈரானை இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ அல்லது இரண்டும் இணைந்தோ தாக்கி அதன் அணுக்குண்டு உற்பத்தி செய்யும் கனவைத் தகர்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2013இன் இறுதியில் அமெரிக்காவும் ஈரானும் நெருங்க இஸ்ரேல் முகம் சுழித்துக் கொண்டிருக்கிறது. ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் தற்போது ஒன்றிற்கு ஒன்று அதிகம் தேவைப்படுகின்றது. ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடை ஈரானைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையால் 2013இன் முற்பகுதியில் ஈரானியப் பொருளாதாரம் சிதறும் ஆபத்து உள்ளது என பல பொருளாதார நிபுணர்கள் 2012இல் எச்சரித்திருந்தனர். ஆனால் 2013 இன் பிற்பகுதி வரை ஈரான் பொருளாதரத் தடைக்கு எதிராகத்தாக்குப் பிடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் இந்தப் பொருளாதாரத் தடையில் இருந்து விடுபட்டால் ஈரானிய மக்கள் பெரிய சுமையில் இருந்து விடுபடுவார்கள். ஈரானியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். இதற்காக சில விட்டுக் கொட்டுப்புக்களைச் செய்து ஈரான் அமெரிக்காவுடன் உறவை வளர்க்க ஈரான் விரும்புகிறது. ஆனாலும் அமெரிக்காவிற்கு பெருமளவில் விட்டுக் கொடுத்தால் அல்லது பணிந்தால் அது ஈரானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஈரானி உள்ள தீவிரப் போக்கு உடையவர்களை கிளர்ந்து எழச்செய்யும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் அமெரிக்க ஈரானியப் பேச்சு வார்த்தையில் இழுபறி தொடர்கின்றது.

நைரோபியில் அல் கெய்தா ஆதரவுக் குழு கடைத் தொகுதியில் தாக்குதல் செய்த போது தப்பி ஓடும் சிறுமி
அடங்க மறுக்கும் இசுலாமியப் போராளிகள்
பல தலைவர்களை அமெரிக்காவில் ஆளில்லாப் போர்விமானங்களின் தாக்குதல்களுக்கும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கும் பலை கொடுத்தாலும் இசுலாமியப் போராளி அமைப்புக்களான தலிபான், அல் கெய்தா, ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்றவை 2013-ம் ஆண்டு தமது வலிமையை நிலை நிறுத்திக் கொண்டன. தாம் நினைத்த இடத்தில் நினைத்த படி தம்மால் தாக்குதல் நடாத்துவது மட்டுமல்ல தம்மால் பல நாடுகளில் கணிசமான பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்றும் இசுலாமியப் போராளி இயக்கங்கள் 2013இலும் நிரூபித்துள்ளன. தலிபான்களால் சுடப்பட்ட பாக்கிஸ்த்தானியச் சுட்டிப் பெண் மலாலாவை மேற்கு நாடுகள் உலக அரங்கில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான பரப்புரைக் கருவியாக வெற்றிகரமாக திட்டமிட்டு மாற்றினார்கள். வட மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் நடந்த பிரிவினைப் போராட்டத்தில் அல் கெய்தா இயக்கத்தினர் ஊடுருவி அங்கு பெரும் நிலப்பரப்பை தம்வசமாக்கினார். ஒரு பெரும் நிலப்பரப்பு அல் கெய்தாவின் வசமானதால் பிரான்ஸ் அங்கு படைகளை அனுப்பி அல் கெய்தாவினரிடம் இருந்து மாலியை மீட்டது.

சிரியாவில் பாதிக்கப்பட்ட குழந்தை
திசை மாறிய அரபு வசந்தம்
துனிசியாவில் பழவியாபாரம் செய்து கொண்டிருந்த இளைஞனின் தீக்குளிப்புடன் உருவான அரபு வசந்தம் எகிப்து, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்களை மாற்றியது. சிரியாவில் ஒரு மோசமான உள்நாட்டுப் போரை உருவாக்கியது. ஆனால் எகிப்தில் அரபு வசந்தத்திற்கு முன்  இருந்த நிலையிலும் மொசமான நிலை இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது. துனிசியாவில் நினைத்த இலக்கு இன்னும் அடையப்படவில்லை. லிபியா பல படைக்கலன் ஏந்திய ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட குழுக்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறது.
முடிக்குரியவர்

தென் கொரியா
2013இன் குழப்படிகாரனாக அமைந்த நாடு வட கொரியாவாகும். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் மீறி தனது அணுப் படைக்கலனகளை உற்பத்தி செய்யப் போவதாக வட கொரியா அறிவித்தது. பல தொலைதூர ஏவுகணைகளையும் வட கொரியா பரிசோதனை செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணைகளை தனது நட்பு நாடான தென் கொரியாவில் நிறுவியது. வட கொரிய அதிபர் கிம் ஜொங் ஒரு கொலை முயற்ச்சியில் இருந்து தப்பினார். வட கொரிய அதிபரின் மாமனாரும் அதிகாரத்தில் இரண்டாம் நிலையில் இருந்தவரான ஜான் சங்க் தாய்க்கிற்கு தேசத் துரோகக் குற்றத்திற்காக கொலைத் தண்டனை வழங்கப்பட்டது. இவர் தனது நாட்டில் தனது அதிகாரப்பிடியாக அதிகரிக்க முயற்ச்சித்தார் எனப்படுகின்றது. இவரது கொலை வட கொரியாவின் நட்பு நாடுகளான இரசியாவையும் சீனாவையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

 இரசியா
 2013 இரசியாவினதும் அதன் அதிபர் விளாடிமீர் புட்டீனதும் ஆண்டாகும். உலகிலேயே அதிகாரம் மிக்க தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி விட்டு புட்டீன் முதலாம் இடத்தைப் பிடித்துக் கொண்டார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவை ஒரு தோற்கடிக்கப்பட்ட நாடாக மேற்கு நாடுகள் இதுவரை காலமும் நடாத்தி வந்தன. உலக அரங்கில் இரசியாவின் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டிய எல்லா இராசதந்திரக் காய் நகர்த்தல்களையும் புட்டீன் வெற்றீகரமாகச் செய்து வருகின்றார். ஐரோப்பிய ஒன்றியம் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளைத் தன்னுடன் இணைத்து தன்னை விரிவாக்கிக் கொண்டு வருவதற்கு உக்ரேயினில் வைத்து விளடிமீர் புட்டீன் ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்.

ஐக்கிய அமெரிக்கா

அமெரிக்காவையும் அதிபர் பராக் ஒபாமாவையும் பொறுத்தவரை 2013 ஒரு மிக மோசமான ஆண்டாகும். எட்வேர்ட் ஸ்னோடன் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு முகவரகம் உலக நாடுகளையும் உலகத் தலைவர்களையும் அமெரிக்க மக்களையும் தீவிரமாக உளவு பார்த்ததை அம்பலப் படுத்தினார். சோமாலியக் கடற்கரையில் அமெரிக்காவின் பிரபல சீல் படைப்பிரிவினர் செய்ய முயன்ற தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. எகிப்தும் சவுதி அரேபியாவும் அமெரிக்காவிடமிருந்து விலகிச் செல்கின்றன. சிரியாவில் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் படுதோல்வியைச் சந்திக்கின்றனர். ஆப்கானிஸ்த்தானில் இருந்து ஒரு கௌரவ வெளியேற்றம் கேள்விக் குறியாகிக் கொண்டிருக்கின்றது. ஈரானின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் திட்டம் இன்னும் வெற்றியளிக்கவில்லை. இஸ்ரேல் அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கையி கடும் அதிருப்தி அடைந்துள்ளது. சிரியாவில் இரசியா தலையிட்டு அமெரிக்காவின் சிரிய வேதியியல் குண்டு பாவித்தமைக்கு எதிரான தாக்குதலை நிறுத்தியது. நிதி நெருக்கடியால் அமெரிக்க அரச பணிமனைகள் இரண்டு வாரங்கள் இழுத்து மூடப்பட்டன. ஒபாமாகெயார் எனப்படும் பராக் ஒபாமாவின் மருத்துவக் காப்புறுதித் திட்டம் பல நிர்வாக நெருக்கடிகளை எதிர் கொண்டு ஒபாமா நிர்வாகத்தின் மானத்தைக் கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கக் கடற்படைக் கப்பலான கௌப்பென்னை தென் சீனக் கடலில் வைத்து சீனக் கடற்படைக் கப்பல் நிறுத்து என உத்தரவிட்டு கௌப்பென்னுடன் மோதும் நிலையை உருவாக்கியது. கௌப்பென் விலகிச் சென்றது. உலகின் வலிமை மிக்க கடற்படையைக் கொண்ட அமெரிக்காவிற்கு இது ஒரு முகத்தில் கரி பூசிய நிகழ்வாகும். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை இந்தியாவும் தேவ்யானி விவகாரத்தில் சோதனைக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றது.

பொங்கி வரும் அலையை படம் பிடிக்கும் சீனர்கள் முகப்புத்தகத்தில் போடுவதற்கு????
சீனா
தனது பொருளாதாரத்தை நிதானமாகவும் நன்கு திட்டமிட்டும் சீர்திருத்தம் செய்து வரும் சீனாவிற்கு 2013 ஒரு மைல்கல்லாகும். உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது பொருளாதாரத்தில் மேலும் சில சீர்திருத்தம் செய்யும் முடிவுகளை சீனா அறிவித்தது. தென் சீனக் கடலையும் கிழக்குச் சீனக் கடலையும் இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தையும் குறிவைத்த தனது விரிவாக்கற் கொள்கையை சீனா 2013இல் மேலும் உறுதி செய்து கொண்டுள்ளது. தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் நகர்வையும் சீனா ஆரம்பித்து வைத்துள்ளது.


இந்தியா
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவு வீழ்ச்சியடைந்த நாணயப் பெறுமதி ஆகியவற்றின் மத்தியில் இந்தியா தனது பொருளாதாரத்தை 2013இல் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஊழல் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. படைத்துறையிலும் விண்வெளி ஆய்விலும் தனது திறைமையை இந்தியா மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆளும் காங்கிரசுக் கட்சியைப் பொறுத்தவரை 2013 ஒரு மோசமான ஆண்டாக இருந்தாலும் 2014இன்னும் மோசமாக அமையலாம்.

இலங்கை
உலக அரங்கில் பயங்கரவாதத்தை ஒழித்த நாடு என்று புகழப்பட்ட இலங்கை தனது புகழை இழந்து ஒரு மோசமான மனித உரிமை மீறல் செய்யும் நாடு என்ற பெயரை 2013இல் பெற்று விட்டது. பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு பிள்ளையார் பிடிக்கப் போன கதையாகிவிட்டது. 2013 மாகாண சபையிலும் 13-ம் திருத்தத்திலும் ஒன்றும் இல்லை என்பதை நடை முறை ரீதியாக நிரூபிக்கும் ஆண்டாக அமைந்தது.

2013இல் நிகழ்ந்து கொண்டிருக்கும் மோசமான நிலமைகள் சீரடையும் அறிகுறி எங்கும் இல்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...