Friday 29 November 2013

சீனா, ஜப்பான், அமெரிக்கா - போர் மூளுமா?

செங்காகு தீவுக் கூட்டத்தில் ஜப்பானியப் போர் விமானம்
சீனாவும் தனது ஒரு தலைப்பட்சமாக நிர்ணயித்த வான் பாதுகாப்பு வலயத்திற்கு தனது SU-30 மற்றும் J-11போர் விமானங்களையும் KJ-2000 வான் சார் கதுவி விமானங்களையும் அனுப்பியுள்ளது. சீனா 24-11-2013 கிழக்குச் சீனக் கடலில் பத்து இலட்சம் சதுர மைல் வான்பரப்பை தனது பிரதேசம் எனப் பிரகடனப் படுத்தி அதற்குள் பறக்கும் விமானங்கள் தனது அனுமதியைப் பெறவேண்டும் என்றும் அல்லது அவற்றின் மீது அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது.

சீனாவின் அறிவிப்பை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தமது ஆட்சேபனையைத் தெரிவித்தன. சீனாவின் அறிவிப்பைத் தொடர்ந்து அதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல் இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது. இது சீனா தனது வான் பாது காப்பு வலயம் என அறிவிப்பதற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட பறப்பு என்றது அமெரிக்கா. இதைத் தொடர்ந்து ஜப்பானியப் போர் விமானங்களும் தென் கொரியப் போர் விமானங்களும் குறித்த வான்பரப்பிற்குள் பறந்து சென்றன.

போர் மூளுமா?
கிழக்குச் சீனக் கடலில் நடந்து கொண்டிருப்பது ஒரு மீசை முறுக்கலும் வேட்டியை மடிச்சுக் கட்டுதலும் தான். மோதலுக்கான ஆரம்பம் அல்ல. தமிழ்ப்படத்தில் வில்லன் டேய் எனக் கத்த கதாநாயகன் அதும் உரத்து டேய் எனக் கத்துவது போல்தான் இப்போது நடக்கிறது. இது ஒரு போராக மாறுவதை இதில் சம்பந்தப் பட்ட எந்த ஒரு நாடும் விரும்பவில்லை. ஒரு போர் மூளும் ஆபத்து இருந்தால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிக்கும். பங்குகளின் விலைகள் சரியும். அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. எந்த ஒரு நாடும் படைகளை நகர்த்தியதாக தகவல்கள் இல்லை. சீனா தொடங்கிய இந்த முறுகல் நிலையில் அது தோற்றுவிட்டதாக சீன மக்கள் உணர்வதை சீன ஆட்சியாளர்கள் விரும்ப மாட்டார்கள். சீனா தனது வான் பாது காப்பு அறிவிப்பை திரும்பப் பெற மாட்டாது. மாறாக இந்ந்த அறிவிப்பை தொடர்ந்து வலியுறுத்தாமல் நாளடைவில் அது நீர்த்துப் போகும்.


Thursday 28 November 2013

சீனக் கடலில் உருவாகும் ஈழ மக்களுக்கான ஆபத்து

தற்போது உலகத்திலேயே பெரும் போர் உருவாகும் ஆபத்து உள்ள இடங்களாக தென் சீனக் கடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. பெரும் ஆதிக்கப் போட்டிக்கான எல்லா வியூகங்களும் அங்கு வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகிலேயே பெரும் படைபலப் போட்டியும் படைவலுக் குவிப்பும் இப்போது ஆசியாவிலேயே நடக்கின்றது.

ஈழ மக்களைப் பொறுத்த வரை தம்மைப் பாதிக்கக் கூடிய உலக அரசியல் என்றவுடன் திருக்கோணமலையைத்தான் பெரும்பாலானவர்கள் கருத்தில் கொள்கின்றார்கள். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியும் மிக நீண்ட காலம் தரையில் தரிக்காமல் கடலில் பயணிக்கக் கூடிய அணுவலுவில் இயங்கும் கடற்கலன்களின் உற்பத்தியும் திருகோணமலையின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டிருக்கின்றது. உலக வர்த்தகத்தின் மூன்றி இரண்டு பகுதி இந்து மாக்கடலினூடாக நடக்கின்றது. அதைக் கட்டுப்படுத்தக் கூடிய சிறந்த இடமாக இலங்கையை அண்டியுள்ள கடற்பரப்பிலும் பார்க்க மத்திய கிழக்கில் உள்ள ஹோமஸ் நீரிணையும் மலேசியாவை அண்டியுள்ள மலாக்கா நீரிணையும் இருக்கின்றன. இலங்கையை அண்டியுள்ள கடற்பரப்பு மிகப் பரந்தது. அங்கு வைத்து ஒரு கடற்போக்கு வரத்தைத் தடுப்பது கடினம். ஆனால் மிகக் குறுகிய நீர் வழியான ஹோமஸ் நீரிணையிலும் மலாக்கா நீரிணையிலும் வைத்து தடுப்பது இலகு. இதனால் அமெரிக்கா பாஹ்ரேய்னில் தளம் அமைத்து தனது ஐந்தாவது கடற்படைப் பிரிவை அங்கு வைத்துள்ளது.

இப்போது தென் சீனக்கடலில் 90% கடற்பரப்பை சீனா தன்னுடையவை என்று அடம் பிடிக்கிறது. தென் சீனக் கடலில் உள்ள தீவுகளிற்கு சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ். புரூணே, மலேசியா, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அத்தீவுகளில் உள்ள மீன்வளம், கனிம வளம் மட்டும் இந்த உரிமைப்பிரச்சனையைக் கொண்டு வரவில்லை. எண்ணெய் வளம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உரிமை கொண்டாடுபவர்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 1974இலும் 1988இலுன் சீனாவும் வியட்னாமும்  ஸ்பிரட்லி தீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன.

தென் சீனக் கடலானது பசிபிக் பெருங்கடலுக்கும் இந்துப் பெருங்கடலுக்கும் இடையில் இருக்கும் 3.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பாகும். இது வடக்குத் தெற்காக 1800 கிலோ மீட்டர்  நீளத்தையும் கிழக்கு மேற்காக 900 கிலோ மீற்றர் நீளத்தையும் கொண்டது. தென் சீனக் கடலில் பல குட்டித் தீவுகள் உள்ளன. இவற்றில் பல தீவுகள் கடல் பெருக்கெடுக்கும் போது முற்றாக நீரில் மூழ்கிவிடும்.

கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான முறுகல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போகின்றது. சீனாவிற்கு எதிராக அமெரிக்காவும் களமிறங்கி விட்டது என்பதை  நவம்பர் 24-ம் திகதியில் இருந்து நடப்பவை உறுதி செய்கின்றன. கிழக்குச் சீனக் கடல் வான் பரப்பில் பெரும் பகுதியை சீனா தனது வான் பாதுகாப்பிற்கு உட்பட்ட வலயம் என 24-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது. இந்த வான் பரப்பு சீனாவும் ஜப்பானும் தமது எனச் சொந்தம் கொண்டாடும் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால் உலக அரங்கில் ஒரு பெரும் அதிர்வலை உருவானது.  இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல் இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது. இது சீனா தனது வான் பாது காப்பு வலயம் என அறிவிக்க முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட பறப்பு என்கின்றது அமெரிக்கா.  அமெரிக்க விமானங்கள் மேற்குப் பசுபிக் கடலில் உள்ள குவாம் கடற்படைத் தளத்தில் இருந்து கிழக்குச் சீனக் கடலில் தமது பறப்புக்களை மேற் கொண்டன. இப்பறப்புக்கள் பற்றி அமெரிக்கா சீனாவிற்கு எந்த முன்னறிவிப்பையும் செய்யவில்லை. சீனா அறிவித்த வலயம்  சீனத் தரையில் இருந்து 500 மைல்கள் வரை நீள்கின்றது.

சீனா தனது குறித்த வான் பரப்பிற்குள் வரும் விமானங்களை இனம் காணும் பணியை சரியாகச் செய்துள்ளதாகச் சொல்கின்றது. இதை எழுதும் வரை சீனா எந்தவித எச்சரிக்கையையோ கண்டனத்தையோ அமெரிக்காவிற்கு விடுக்கவில்லை. சீனாவின் வான் பாதுகாப்பு வலய அறிவிப்பிற்கு எதிராக ஜப்பான் தனது கடும் ஆட்சேபனையை சீனாவிடம் தெரிவித்திருந்தது. அமெரிக்கா தனது விமானங்கள் கிழக்குச் சீனக் கடற் பிராந்தியத்தில் வழமையாகச் செய்யும் பறப்புக்களைத் தொடர்ந்து செய்யும் என்றது.அமெரிக்காவைத் தொடர்ந்து நவம்பர் 28-ம் திகதி வியாழக் கிழ்மை ஜப்பானும் தென் கொரியாவும் சீனா கண்காணிப்பு வலயமாக அறிவித்த பகுதிக்குள் தமது விமானங்களை சீனாவிற்கு அறிவிக்காமல் பறக்க விட்டன. இவை சீனாவிற்கு சவால் விடுக் செயல்களாகக் கருதப்படுகின்றது.

சீனா ஒக்டோபர் மாதம் தனது நீர்மூழ்கிக்கப்பல்களின் பலத்தை உலகிற்குக் காட்டியது. அதைத் தொடர்ந்து தனது சந்திரனில் தளம் அமைக்கும் திட்டத்தையும் உலகிற்குப் பறை சாற்றியது.  இந்த இரு நிகழ்வுகளிற்கும் இடையில் சீனா தனது வான் பாதுகாப்பு வ்லயப் பிரகடனத்தைத் திட்டமிட்டுச் செய்தது.



ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கும் முறுகலில் அமெரிக்காவும் தலையிடுவது முழு ஆசியப் பிராந்தியத்திலும் ஒரு பதட்ட நிலையை உருவாக்கியுள்ளது. சீனாவின் விரிவாக்கக் கொள்கைகளால் ஏற்படும் ஆபத்தை பல ஆசிய நாடுகள் கரிசனையில் கொண்டுள்ளன. சீனாவின் விரிவாக்கற் கொள்கை தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் மட்டுமல்ல இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தையும் இலக்கு வைத்துள்ளது. 1949-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் விரிவாக்கற் கொள்கைக்கு எதிராக நேட்டோ எனப்படும் வட அந்திலாண்டிக் நாடுகளின் ஒப்பந்தம் செய்யப்பட்டது போல் ஆசிய நாடுகள் ஒன்று கூடி ஒரு படைத்துறை ஒப்பந்தத்தை செய்யும் சாந்தியம் உண்டு. இப்படியான ஒரு அணியில் ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, ஒஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ். புரூணே, மலேசியா, வியட்னாம், கம்போடியா, சிங்கப்பூர் ஆகியவை இணைந்து நேட்டோவைப் போல் ஒரு படைத்துறை மற்றும் அரசியல் கூட்டணியை அமைக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகிவிட்டது. சீனாவும் வார்சோ ஒப்பந்த நாடுகள் போல் தன்னுடன் வட கொரியா மற்றும் மொங்கோலியா போன்ற சில மத்திய ஆசிய நாடுகளைத் தன்னுடன் இணைத்து ஒரு படைத்துறைக் கூட்டமைப்பை அமைக்க முயலலாம். முதலாவது அணியில் இரு முக்கிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் எப்போதும் சிங்களவர்களுக்கு ஆதரவாகவே நடந்து கொள்ளும். மற்ற நாடான இந்தியா எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவே நடந்து கொள்ளும். இந்தியா தனது நாட்டில் உள்ள அதிகாரப்பரவலாக்கத்திலும் அதிகமான அதிகாரப் பரவலாக்கத்தை ஈழத் தமிழர் பெற்று விடக்க் கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக நிற்கும். இரண்டாவது அணியில் சீனா எப்போது சிங்களவர்களின் ஆதரவாகச் செயற்படும். இரண்டு அணியும் இலங்கையைத் தம் பக்கம் இழுக்கும் போட்டியில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைப் போட்டி போட்டுக் கொண்டு செய்யலாம். அப்போது ஈழத் தமிழர்களின் நிலை ஒரு அநாதையின் நிலையை அடையுமா?

Tuesday 26 November 2013

ஐரோப்பிய ஆதிக்கப் போட்டியும் இரசிய எரிபொருள் பொருளாதாரமும்

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து எரிபொருள் விலை அதிகரிப்பு மற்ற நாடுகளுக்கு பெரும் தொல்லையாக இருந்த போது இரசியாவிற்கு அது பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இரசியா உலகச் சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்ட தனது வருமான அதிகரிப்பைவைத்துக் கொண்டு பல பொருளாதாரப் பிரச்சனைகளை சீர் செய்தது. தற்போது இரசியா உலகின் மிகப்பெரிய எரிபொருள் ஏற்றுமதி நாடாகும். இரசியாவின் மொத்த ஏற்றுமதியில் எரிபொருள் ஏற்றுமதி 70விழுக்காடாகும். இரசிய அரச வருமானத்தின் அரைப்பங்கு எரிபொருள் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கின்றது.

இரசியாவின் அபரிமிதமான எரிவாயு இருப்பு
இரசியாவிடம் 1,680,000 பில்லியன் கன அடிகள் (1,680 இலட்சம் கோடி கன அடிகள்) எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் படி இரசியா இன்னும் 750 ஆண்டுகளுக்கு எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும். தனது இந்த எரிவாயு வளத்தில் தங்கியிருக்கும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை இரசியா தனது பக்கம் இழுக்கவும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையாமல் இருக்கவும் இரசியா முயன்றது.

ஜேர்மானிய விரிவாக்கம்     
                                                                                 
ஐரோப்பாவில் ஜேர்மனியின் ஆதிக்கம் வளர்ந்து வருவதையிட்டு பிரித்தானியா பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு பாதி-இணைப்பு நிலையைப் பேணிக்கொண்டு தனது தனித்துவத்தையும் தனது நாணயமான ஸ்ரேலிங் பவுண்டையும் பாதுகாத்துக் கொண்டு இருக்க பிரித்தானியா விரும்புகிறது. ஜேர்மனி மீண்டும் படைத்துறையில் வலிமை மிக்க நாடாக மாறி பிரித்தானியா போல் தன்னுடன் ஒரு பங்காளியாக இணைவதை ஐக்கிய அமெரிக்கா விரும்புகிறது. ஜேர்மனியின் ஐரோப்பிய ஆதிக்க வளர்ச்சியால் அதிக ஆத்திரமடையும் நாடாக இரசியா இருக்கிறது. 1991இல் நடந்த சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் முன்பு போல் ஒரு உலக ஆதிக்க நாடாக மாற இரசியா பெரும் முயற்ச்சி எடுக்கின்றது. தனது சோவித் ஒன்றிய நாடுகளும் முன்னாள் நட்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து வருவது இரசியாவை பெரும் கவலைக்கு உள்ளாக்கியது. போல்ரிக் நாடுகளான எஸ்தேனியா, லத்வியா, லித்துவேனியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தமை இரசியாவை ஆத்திரப்படுத்தியது. 01/07/2013இல் இருந்து குரோசியாவும் 28வது நாடாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. ஐரோப்பாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான எல்லைக் கோடு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கும் பின்னர் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் போல்ரிக் நாடுகள் சுதந்திரப் பிரகடனம் செய்த போது முந்தி விழுந்து அவற்றை ஜேர்மனி அங்கீகரித்தது. அவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்குரிய உகந்த பொருளாதார சூழ் நிலையை அந்த நாடுகளில் உருவாக்க ஜேர்மனி பெரிதும் உதவியது. 1994இல் இரசியப் படைகள் போல்ரிக் நாடுகளில் இருந்து வெளியேறுவதற்கும் ஜேர்மனி உதவியது. போல்ரிக் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தவுடன் இரசியா அந்த நாடுகளுக்கு தான் விற்பனை செய்யும் எரிவாயுக்களின் விலைகளைக் கண்டபடி உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் அந்த நாடுகளில் மாற்று எரிவள உபயோகங்களை ஊக்குவிக்கும் வேலைத் திட்டங்களைச் செய்தது.

இரண்டு பெரிய போர்களின் பின்னர் தமது எல்லைகளை தீர்மானித்துக் கொண்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை ஜேர்மனி தனது பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு ஒன்றுபட்ட இணைப்பாட்சி நாடாக்கி அழிக்க முயலாமல் பார்த்துக் கொள்ளும் அறிவும் அனுபவமும் மேற்கு ஐரோப்பியர்களிடம் இருக்கின்றது. ஜேர்மனிய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் பல நாடுகளைப் பொறுத்தவரை தற்காலிகமானதே. இதை நன்கு உணர்ந்து செயற்படும் நாடு பிரான்ஸ் ஆகும். போல்ரிக் நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து ஒன்றாகுவது இரசியாவை ஆத்திரப்படுத்தி இன்னும் ஒரு பெரும் போருக்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இரசியாவிற்கும் ஜேர்மனிக்கும் இருக்கிறது.

தடம் மாற முயன்ற உக்ரேய்னும் தடுக்கும் இரசியாவும்
உக்ரேய்ன் நாடும் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடாத்தி வந்தன. இரு தரப்பும் Ukraine-EU Association Agreement என்னும் உக்ரேய்ன் ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் கைச்சாத்திட முயன்றன. இரசியா இதற்குப் பல வழிகளில் முயன்றது. தடவலும் தண்டமும் அடிப்படையில் இரசியாவின் அணுகு முறை இருந்தது. இரசியா உக்ரேய்னை எரி வாயுத் தடை  போன்ற பல தடைகளைச் செய்வதாக மிரட்டிய இரசியா இலகு கடன் உக்ரேய்னிற்கு கொடுப்பதாகவும் சொன்னது. முதலில் இந்த ஒப்பந்தத்தைச் செய்து பின்னர் படிப்படியாக உக்ரேய்னையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதே ஜேர்மனியின் திட்டம். ஆனால் இரசியாவின் எதிர்ப்பு காரணமாக உக்ரேய்ன் ஐரப்பிய ஒன்றிய ஒப்பந்தம் கைச்சாத்தும் முயற்ச்சி கைவிடப்பட்டது. இதற்கு பல உக்ரேய்ன் மக்கள் பலத்த எதிர்ப்புக் காட்டுகிறார்கள். நாளுக்கு நாள் அவர்களின் எதிர்ப்பு  கூடிக்கொண்டே போகின்றது. உக்ரெய்னை மீண்டும் இரசியாவின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவதை இவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இவர்களுக்கு எதிராக அரசு கடுமையான வாடவடிக்கைகளை எடுக்கிறது.

2011-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரம் 5.1விழுக்காடு வளர்ச்சியடைந்தது. இது வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறந்த வளர்ச்சியாகும். ஆனால் அதன் பின்னர் இரசியப் பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது. 2013-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வளர்ச்சியைப் பார்க்கும் போது அது ஆண்டுக்கு 1.2 விழுக்காடாகக் குறைந்து விட்டது. அத்துடன் தற்போது இரசியாவில் முதலீடுகள் எந்தவித வளர்ச்சியும் இன்றி இருக்கின்றது. திறன் குறைந்த இரசியப் பொருளாதாரத்திற்கு உற்பத்தித் துறையில் முதலீடு அவசியமாகும். இதுவரை காலமும் இரசியா தனது எரிபொருள் உற்பத்தியில் கிடைத்த வருமானத்தை உற்பத்தித் துறையிலும் கட்டமைப்பு அபிவிருத்தியிலும் முதலீடு செய்து வந்தது. அது வேலை வாய்ப்பையும் மக்களின் கொள்வனவு வலுவையும் அதிகரித்தது.

இரசிய பொருளாதார வளர்ச்சி குன்றல்
எரிபொருள் வருமானம் குறைந்ததால் உற்பத்தித் துறையிலும் கட்டமைப்பு அபிவிருத்தியிலும் முதலீடு குறைந்து விட்டது. இதனால் பொருளாதாரத்திற்குத் தேவையான மக்களின் கொள்வனவு வலு பலவீனமடைகிறது. இது இரசியப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது. ஈரானுடன் நடக்கும் பொருளாதாரத் தடை நீக்கல் பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தால் உலக எரிபொருள் விலை மேலும் வீழ்ச்சியடையும் சாத்தியம் உண்டு. இதுவும் இரசியாவின் பொருளாதாரத்தை பாதிக்கலாம்.

ஐக்கிய அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய எரிபொருள் இருப்புக்களும் எரிக்கக் கூடிய மாக்கற்பாறைகள் அமெரிக்காவிலும் கனடாவிலும் கண்டு பிடிக்கப்பட்டதும் உலக எரிபொருள் விலையை இனி வரும் காலங்களில் குறையச் செய்யும். இதுவரை எரிபொருள் இறக்குமதி நாடாக இருந்த அமெரிக்கா இனி வரும் காலங்களில் எரிபொருள் ஏற்றுமதி நாடாக மாறவிருக்கிறது. அத்துடன் உலகின் மிகப் பெரிய எரிபொருள் உற்பத்தி நாடு என்ற நிலையில் தற்போது இருக்கும் இரசியாவை 2015இல் அமெரிக்கா பின் தள்ளி தான் உலகின் மிகப்பெரிய எரி பொருள் உற்பத்தி நாடாக உருவெடுக்கவிருக்கிறது.

அரச நிதிக் குறைபாடு                                                                                                                இரசிய அரசின் வருமானம் குறைந்து கொண்டு போகவும் அதன் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மற்றும் சமூக உதவிக் கொடுப்பனவுகள் அதிகரித்துக் கொண்டு போகவும் இரசிய அரச நிதியில் பெரும் பாதகமான நிலை உருவாகப் போகிறது எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள். இனிவரும் இருபது ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் 3.4 விழுக்காடு வளரவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் வேளையில் இரசியப் பொருளாதாரம் ஆண்டொன்றிற்கு சராசரியாக 2.5 விழுக்காடு மட்டுமே வளரவிருக்கிறது. இந்த எதிர்பார்ப்பின் படி இரசிய அரச நிதியில் 28 ரில்லியன் டொலர்கள்( 28இலட்சம் கோடி) பற்றாக் குறை ஏற்படவிருக்கிறது. பல இரசியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் இரசிய மக்கள் தொகையும் குறைந்து கொண்டே போகிறது. நாட்டை விட்டு வெளியேறும் பலர் திறமை மிக்க இளம் தொழிலாளர்களாகும். அத்துடன் இரசிய மக்கள் தொகைக் கட்டமைப்பில் இளையோர் தொகை குறைந்தும் முதியோர் தொகை அதிகரித்தும் போகப் போகிறது. இதுவும் இரசியப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.

வெளியேறும் முதலீடுகள்                                                                                       
இரசியாவில் இருந்து 48பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீடு 2013இன் முதல் ஒன்பது மாதங்களில் வெளியேறி விட்டது. இரசிய நிறுவங்கள் தமது சேமிப்புக்களை வெளிநாடுகளில் இலாபம் அதிகம் தரக்கூடிய துறைகளில் முதலீடு செய்கின்றன.  இரசியப் பொருளாதாரத்தின் செயற்படு திறனை மேம்படுத்த அவசியம் தேவையான முதலீடு நாட்டை விட்டு வெளியேறுவது ஒரு நல்ல செய்தியல்ல.

குளிரவைக்கும் குளிர்கால ஒலிம்பிக்                                              
அமெரிக்கா தனது கவனத்தை ஆசியாவை நோக்கித் திருப்பவும் மத்திய கிழக்கில் தனது கவனத்தைக் குறைக்கவும் திட்டமிட்டிருக்கும் வேளையில் இரசியா தனது ஆதிக்கத்தை மத்திய கிழக்கில் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கின்றது. இதற்கு இரசியா தனது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும். அத்துடன் 2014இல் இரசியாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கிற்கும் அதிக செலவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. இஸ்லாமியர்களை அதிகம் கொண்ட கொக்கஸஸ் பிரதேசத்துக்கு அண்மையில் இருக்கும் சொச்சி நகரத்தில் இரசியா குளிர்கால ஒலிம்பிக்கை நடத்த இருப்பதால் அதிக பாதுகாப்புச் செலவு தேவைப்படுகின்றது. அத்துடன் இரசியாவிலேயே குளிர் குறைந்த நகர் சொச்சியாகும். அங்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்துவதும் அதிக செலவீனமான ஒன்றாகும். இதனால் உலக குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் அதிக செலவீனம் ஏற்படும் போட்டியாக சொச்சி ஒலிம்பிக் அமைகிறது. மொத்தச் செலவு ஐம்பது பில்லியன் டொலர்களுக்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியும் இரசியாவின் அரச நிதியில் பாதகமான விளைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இரசியாவின் பொருளாதாரம் மோசமானால் அதைப் பாவித்து ஜேர்மனி அதைச் சுற்ற உள்ள நாடுகளை தன்வசம் இழுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துவிடும். இது இரசியாவின் தனிமைபடுத்திப் பலவீனப்படுத்தலாம்.

Monday 25 November 2013

ஈரானுடனான உடன்பாடும் மத்திய கிழக்குக் கேந்திரோபாயமும்

ஈரானுடனான அணுக்குண்டுப் பேச்சு வார்த்தை முறியாமல் தொடர்கின்றது. இரண்டாவது சுற்றுப் பேச்சு வார்த்தையில் ஒரு இடைக்கால உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த உடன்பாடு மத்திய கிழக்கில் நாடுகளிற்கும் இடையிலான உறவுகளையும் கேந்திரோபாயச் சமநிலையையும் பாதிக்குமா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தையில் P5+1 எனப்படும் குழுவாக ஈடுபடுகின்றது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான(P5) ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியவற்றுடன் ஜேர்மனியும் இணைந்து P5+1 என்னும் குழு அமைக்கப்பட்டு ஜெனிவாவின் ஈரானின் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாகப் பேச்சு வார்த்தை இரண்டு சுற்றுக்கள் நடந்தன. முதல் சுற்று நவம்பர் 7-ம் திகதி நடந்தது அதில் முக்கிய உடன்பாடுகள் எட்டப்படவில்லை. நவம்பர் 20-ம் திகதி முதல் 24-ம் திகதி வரை நடந்த பேச்சு வார்த்தையில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டன. அதன்படி ஈரான் 20% இற்கு யூரேனியம் பதப்படுத்துவதை நிறுத்திக் ஒத்துக் கொண்டுள்ளது. 20% பதப்படுத்திய யூரேனியத்தில் இருந்து இலகுவாக அணுக்குண்டை உற்பத்தி செய்ய முடியும். ஜெனீவாவில் நவம்பர் 24-ம் திகதி காலை ஏற்பட்ட உடன்பாடுகளின் படி:
1. ஈரான் 5% மட்டும் யூரேனியத்தைப் பதப்படுத்தலாம்.
2. ஈரான் தனது அணு ஆய்வு தொடர்பான எல்லா நிலையங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அணு நிபுணர்கள் குழு தினசரி ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.
3.
Arak இல் உள்ள புளூட்டொனியம் உற்பத்தி செய்யக் கூடியதாகக் கருதப்படும் கனநீர் பதப்படுத்துவதை ஈரான் உடன் நிறுத்த வேண்டும்.
4. ஈரான் மீது அடுத்த ஆறு மாதங்களுக்கு புதிய பொருளாதாரத் தடைகள் எதுவும் செய்யப்படமாட்டாது.
5. முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் ஏழு பில்லியன் (எழு நூறு கோடி) அமெரிக்க டொலர்கள் ஈரானுக்கு வழங்கப்படும். 
6. ஈரான் தன்னிடம் உள்ள பதப்படுத்தப்பட்ட யூரேனியக் கையிருப்பை மேலும் பதப்படுத்த முடியாதபடி மாற்ற வேண்டும்.

ஈரானுடனான உடன்பாட்டை எதிர்க்கும் முக்கிய இரு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா உடன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.  அண்மைக்காலங்களாக சவுதி அரேபியா எகிப்துடன் இணைந்து இரசியாவுடன் ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்தும் தன் நகர்வுகளை ஆரம்பித்து விட்டது. ஆனால் மற்ற நாடான் இஸ்ரேல் ஜெனிவாவில் P5+1 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இடைக்கால உடன்பாடு தொடர்பாக தனது கடும் ஆத்திரத்தை வெளிவிட்டுள்ளது. இந்த உடன்பாடு உலகத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ளது என்றும் ஒரு மிகப்பெரிய சரித்திரத் தவறு என்றும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்க வெளியுறவிற்குப் பொறுப்பான அரசுச் செயலர் ஜோன் கெரி இந்த உடன்பாடு உலகத்தையும் இஸ்ரேலையும் பாதுகாக்கும் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஈரானிடம் இருக்கும் எல்லாப் பதப்படுத்தப்பட்ட யூரேனிய இருப்புக்களையும் அழிக்க வேண்டும் ஈரான் எந்த ஒரு யூரேனியப் பதப்படுத்தலையும் செய்யக்கூடாது என்று கருதுகின்றது. ஆனால் ஈரான் தனக்கும் யூரேனியப் பதப்படுத்தும் உரிமை மற்ற நாடுகளுக்கு உள்ளது போல் உள்ளது, தான் ஒரு கீழ்த்தர நாடு அல்ல என்கின்றது. இஸ்ரேல் ஏற்கனவே அணுக்குண்டைத் தயாரித்து விட்டது என்று பலர் நம்புகின்றனர். இதை இஸ்ரேல் மறுக்கவும் இல்லை உறுதி செய்யவுமில்லை. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்யக் கூடிய நிலையை அடைந்தால் தான் ஒரு தலைப்பட்சமாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவேன் என இஸ்ரேல் ஏற்கனவே எச்சரித்து விட்டது. ஜெனிவாவில் ஈரானியத் தரப்பினர் சிரித்த முகத்துடன் அமெரிக்கத் தரப்பினருடன் கட்டித் தழுவிக் கொண்டாடுவதைப் பார்த்து இஸ்ரேலியர் விசனம் அடைந்துள்ளனர். அத்துடன் அமெரிக்கத் தரப்பினரும் ஈரானியத் தரப்பினரும் கடந்த பல மாதங்களாக இரகசியப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்த்ததும் இஸ்ரேலியரகளை ஆத்திரப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் பொறுத்தவரை அவர் ஈரானுடன் ஒரு போரை விரும்பவில்லை. ஈரானை அணுக்குண்டு தயாரிப்பதில் இருந்து தடுக்க 1. இஸ்ரேல் ஈரானிய அணு ஆய்வு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். 2.
அமெரிக்கா ஈரானிய அணு ஆய்வு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். 3 அல்லது இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும். ஒபாமா இதில் எதையும் விரும்பவில்லை.  இது அமெரிக்காவின் மிக நெருக்கமாக மிக நீண்டகால நட்பு நாடுகளாக இருக்கும் இஸ்ரேலையும் சவுதி அரேபியாவையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. ஈரானுடனான பேச்சு வார்ததையை விரும்பாதவர்கள் இந்தப் பேச்சு வார்த்தையை கரடியுடன் நடனமாடுவதற்கு ஒப்பிடுகின்றனர். நடனம் இடையில் முறிந்தால் என்ன நடக்கும் என்று தெரியாது என்பதையிட்டு அவர்கள் அஞ்சுகின்றனர். ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிரச்சனை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். ஈரானுடனான பிரச்சனை வெறும் யூரேனியம் பதப்படுத்தல் பிரச்சனை மட்டுமல்ல. ஈரானின் ஆதரவுடன் செயற்படும் தீவிரவாதக் குழுக்கள் உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தல்கள் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றார்கள். பொருளாதாரத் தடையில் இருந்து தற்காலிக விடுதலை பெற்ற ஈரான் ஆறு மாதங்களில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தி விட்டால் பின்னர் பேச்சு வார்த்தையில் ஈரான் அதிக வலுவுடன் ஈடுபடலாம் என அவர்கள் கருதுகிறார்கள்.

ஐரோப்பாவின் அதிகரித்த ஈடுபாடு

ஈரானுடனான பேச்சு வார்த்தையின் போது பிரான்ஸ் மற்ற நாடுகளும் பார்க்க கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்கா ஈரானுடனான வர்த்தகத்தைக் கருத்தில் கொண்டு சில விட்டுக் கொடுப்புகளைச் செய்யத் தயாராக இருந்த போதும் பிரான்ஸ் எந்த வித விட்டுக் கொடுப்புக்களையும் செய்யாமல் இருந்தது. பல அமெரிக்க ஊடகங்கள் ஜெனிவாப் பேச்சு வார்த்தை குழம்பினால் அதற்கு பிரான்ஸே காரணம் எனக் குற்றம் சாட்டின. பிரித்தானிய இராசதந்திரியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை ஆணையாளருமான கதரின் அஸ்டன் திரைமறைவில் மிகத் திறமாகச் செயற்பட்டு உடன்பாடு ஏற்படுவதில் கடுமையாக உழைத்தார் என்ற பாராட்டைப் பெற்றுள்ளார். இவர் அமைதியாகவும் சாந்தமாகவும் செயற்பட்டு காரியத்தை சாதித்துள்ளார். இறுதி முடிவு எடுக்கும் கூட்டத்தில் ஈரானிய வெளிநாட்டமைச்சருடன் ஜோன் கெரியும் கதரின் அஸ்டனும் மட்டுமே ஈடுபட்டனர்.

சவுதி அரேபியாவின் அணுக்குண்டு இறக்குமதி
லிபியா, துனிசியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சவுதி அரேபியாவின் முக்கிய எரிபொருள் வளப் பிரதேசங்களைத் தான் கைப்பற்ற வேண்டும் என்ற கனவு ஈரானிய மதவாத ஆட்சியாளர்களுக்கு உண்டு என சவுதி அரேபியா கருதுகிறது. ஈரானின் இந்தக் கனவை அது அணுக்குண்டு மூலம் சாதிக்க நினைக்கிறது என்று சவுதி அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தது போல் ஈரானையும் ஆக்கிரமிக்க வேண்டும் என சவுதி விரும்புகிறது. அமெரிக்கா-துருக்கி-ஈரான் என்ற முக்கூட்டு நட்பு உருவானால் சவுதி அரேபியா தனது மாற்றுத் திட்டமாக பாக்கிஸ்த்தானிடம் இருந்து அணுக்குண்டை இறக்குமதி செய்யும் எண்ணத்துடன் இருக்கிறது.

ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் தமது அணுக்குண்டு உற்பத்தி செய்யும் மூல தொழில்நுட்ப அறிவை பாக்கிஸ்த்தானிடம் இருந்தே பெற்றன. பாக்கிஸ்த்தான் அணுக்குண்டு உற்பத்தி செய்யாமல் தடுத்திருந்தால்????

Sunday 24 November 2013

நகைச்சுவைக் கதை: பொய் சொன்னதால் உயிருடன் புதைக்கப்பட்ட அரசியல் வாதி

 திருத்த முடியாத கழுதைகளின் கழகத்தைச் சேர்ந்த ஆறு சட்ட மன்ற உறுப்பினர்களும் மூன்று மாவட்டச் செயலாளர்களும் ஒரு கிராமத்தினூடாக ஒரு வண்டியில் விரைவாகச் சென்று கொண்டிருந்த போது பயங்கர விபத்தில் சிக்கி பள்ளத்தில் விழுந்து விட்டனர்.

அவர்கள் எல்லோரையும் ஒரு விவசாயி புதைத்து விட்டார். அங்கு இரண்டு நாட்கள் கழித்துச் சென்ற காவற்துறையினர் விவசாயியை  விசாரித்தனர். எல்லோரும் படுகாயமடைந்திருந்ததாக விவசாயி சொன்னார். எல்லோரும் இறந்திருந்தார்களா என காவற்துறையினர் விவசாயியைக் கேட்டனர். அதற்கு விவசாயி இருவர் மட்டும் தாம் உயிருடன் இருப்பதாகச் சொன்னார்கள்; இவங்கள் ஒரு நாளும் உண்மை பேசியதில்லை என்பதால் அவர்களும் இறந்திருக்க வேண்டும் என நினைத்துப் புதைத்து விட்டேன் என்றார்.

நீதி மன்றம் போன குழாயடிச் சண்டை
ஒரு குழாயடியில் ஏழு பெண்கள் கடுமையாகச் சண்டை போட்டு அது மோசமான அடிதடியில் முடிந்தது. நீதிமன்றத்திற்கு ஏழு பேரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிச் சத்தமிட்டனர். அப்போது நீதியரசர் உங்களில் மூத்தவள் முதலில் பேசுங்கள் என உத்தரவிட்டார். வழக்குகள் திரும்ப்பப் பெறப்பட்டன.

மாவீரர் நினைவு
பலமிழந்து நிலமிழந்து
பொருளழிந்து நிலையிழந்து
உரமிழந்து உயிரிழிந்து
பரிதவிக்கும் எம் இனத்தை
காக்கவந்து உயிர் கொடுத்த எம் மாவீர்களே
உங்கள் கனவே எங்கள் இலக்காகும்

பரிதவித்து பதை பதைத்து
உதைபட்டு வதைபட்டு
உயிரோடு புதைபட்டு
துணையற்ற என் இனத்தை
காத்திட வந்து உயிர் கொடுத்த எம் மாவீர்களே
உங்கள் கனவே எங்கள் இலக்காகும்


துணையற்று துயருற்று
துடிதுடித்து அடிபட்டு
கலைபட்டு எரியுற்று
கதியற்ற என் இனத்தை
காத்திட வந்து உயிர் கொடுத்த எம் மாவீர்களே
உங்கள் கனவே எங்கள் இலக்காகும்

கதியற்று உணவற்று
தெருவுழன்று கருவழிந்து
உருக்குலைந்து செருக்கழிந்து
பலவுமிழந்த என் இனத்தை
காத்திட வந்து உயிர் கொடுத்த எம் மாவீர்களே
உங்கள் கனவே எங்கள் இலக்காகும்.

இத்தனை அழிவுகள் செய்தபின்
இந்தியாதான் ஒரே கதியாம்
எமது திறவுகோல் இந்தியாவின்
கையில் இருக்கிறதாம்
பிதற்றுகின்றன எருமைகள்
நாயகம் இந்தியம் சனி ஆட்சியல்ல
தாயகம் தேசியம் தன்னாட்சியே உம் கனவு
புனிதர்களே உங்கள் புனிதக் கனவே
எம் இலக்காகும்.

சாட்சியமில்லா வதைகள்
சரணடையவந்தோர் கொலைகள்
போரில் தப்பியோர் உயிருடன் புதையல்
தப்பிக்கும் தப்புக்கள்
மருத்துவ மனைகள்மேல் குண்டுகள்
மருத்துவர்கள் கைதுகள்
தண்ணீருக்கும் தடைகள்
மறைந்து போன உண்மைகள்
மாவீரர்களே மறக்க மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்
உங்கள் கனவை எம் இலக்காக்குவோம்

புனிதர்களே இந்தப் புனித மாதத்தில்
உங்கள் கனவே எங்கள் இலக்கு என
நெஞ்சறைகளில் என்றும் அழியாத
உங்கள் கல்லறைகளில்
உறுதி மொழியெடுத்துக் கொள்கின்றோம் மாவீரரே
உறுதி மொழியெடுத்துக் கொள்கின்றோம்


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...